கோலாலம்பூர்:
இவ்வாண்டு ஜனவரி 1 முதல் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி வரை சமூக ஊடகத் தளங்களில் மோசடி உள்ளடக்கங்களைக் கொண்ட 3,150 பதிவுகளை எம்சிஎம்சி எனப்படும் மலேசியத் தொடர்பு, பல்லூடக ஆணையம் முடக்கியது. ஃபேஸ்புக் 2,871, இணையதளங்கள் 1,471, வாட்ஸ்அப் 254, இன்ஸ்டாகிராம் 13, டெலிகிராம் 11, டிக் டாக் 1 என பதிவாகி இருப்பதாக தொடர்பு, இலக்கவியல் துணை அமைச்சர் தியோ நி சிங் நேற்று தெரிவித்தார்.
இதில் எம்சிஎம்சி அதிகாரங்கள் குறைவாக உள்ளன. இந்த மோசடிகளில் பெரும்பாலானவை போலீசாரால் விசாரிக்கப்படுகின்றன. இருப்பினும் மோசடி உள்ளடக்கம் இருப்பது உறுதி செய்யப்படும்பட்சத்தில் எம்சிஎம்சி அதனை முற்றாக முடக்கு வதற்கு அதிகாரம் கொண்டிருக்கிறது என்று நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி – பதில் நேரத்தின்போது அவர் கூறினார்.
பண்டார் துன் ரசாக் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஸிஸா வான் இஸ்மாயில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த தியோ நி சிங், மோசடியால் பாதிக்கப்பட்டவர்களுள் உடனடியாக உதவி செய்வதற்கு எம்சிஎம்சி எப்போதும் போலீசுக்கு ஆக்கப்பூர்வ மான ஒத்துழைப்பை வழங்கி வருகிறது என்று குறிப்பிட்டார்.
இணையக் குற்றங்களில் தற்போது செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி அதன் கடவுச் சொற்களை ஊடுருவுவது, தகவல் கசிவு, தரவு மீறல்கள், நிதி மோசடி போன்ற ஆபத்துகள் நிகழ்கின்றன. இது தொடர்பில் எடுக்கப்பட்டு வரும் சட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து வான் அஸிஸா முன்னதாக கேள்வி எழுப்பி இருந்தார்.
தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்டம் 709 கீழ் இணைய அச்சுறுத்தல்கள் மீதான சட்ட அமலாக்கத்தின் ஒரு முன் முயற்சி நடவடிக்கையாக தனிநபர் தரவு பாதுகாப்புத்துறை மூலம் தொடர்பு, இலக்கவியல் அமைச்சு தனிநபர் தரவுகளைப் பாதுகாப்பது தொடர்பான பல அம்சங்களை ஆய்வு செய்து வருகிறது என்று துணை அமைச்சர் பதிலளித்தார்.
அச்சட்டத்தில் தரவு பாதுகாப்பு அதிகாரியை நியமித்தல், தரவு கசிவு தொடர்பான தனிநபர் தரவு பாதுகாப்பு ஆணையரிடம் புகார் அளித்தல், தரவு பயனர்கள், தரவு செய்திகளுக்கு அபராத விகிதத்தை அதிகரித்தல் போன்றவை இணைய அச்சுறுத்தல்களைக் கட்டுப்படுத்த முன்மொழியப்பட்டிருக்கும் திருத்தங்களாக உள்ளன என்று கூலாய் நாடாளுமன்ற உறுப்பினருமான தியோ நி சிங் தெரிவித்தார்.