பொருளாதார நெருக்கடி; இராணுவ ஆயுதங்கள் உக்ரைனுக்கு விற்பனை செய்யும் பாகிஸ்தான்?

பொருளாதார சரிவின் காரணமாக அதல பாதாளத்தில் வீழ்ந்திருக்கும் பாகிஸ்தான், அதிலிருந்து மீள்வதற்காக தேசத்தின் பாதுகாப்புக்கான ஆயுதங்களின் கையிருப்பை கரைத்து வருகிறது.

ரஷ்யாவுக்கு எதிரான போர் காரணமாக கடும் ஆயுத பற்றாக்குறைக்கு ஆளாகி இருக்கும் உக்ரைன், பல்வேறு நாடுகளிடம் இருந்தும் உதவியாகவும், விலைக்குமாக ஆயுதங்களை வாங்கி குவித்து வருகிறது. அந்த வகையில் பாகிஸ்தான் வசமிருந்து அமெரிக்க டாலர் மதிப்பில் 364 மில்லியன் மதிப்பிலான ஆயுதங்களை உக்ரைன் விலை கொடுத்து வாங்கியதாக அனைத்துலக ஊடகங்கள் அம்பலப்படுத்தி உள்ளன.

பாகிஸ்தான் தேசத்தின் பொருளாதாரம் தலைக்குப்புற விழுந்திருக்கிறது. திவாலாகும் சூழலில் தவித்து வரும் பாகிஸ்தான், வளைகுடா நாடுகள் மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகியவற்றின் நிதியுதவியை எதிர்பார்த்திருக்கிறது. அதுவரை தாக்குப்பிடிப்பதற்காக, தேசத்தின் பாதுகாப்புக்கு என இருப்பு வைத்துள்ள ஆயுதக் குவியல்களை, அவை தேவைப்படும் உக்ரைனுக்கு விற்றுள்ளது.

2 அமெரிக்க நிறுவனங்கள் வாயிலாக கையெழுத்தான ஒப்பந்தங்களின் வாயிலாக இந்த ஆயுத ஏற்றுமதியில் பாகிஸ்தான் ஆதாயம் பார்த்திருப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் உள்ள விமானப்படை தளமான நூர்கானில் இருந்து பிரிட்டன் ராணுவ விமானங்கள், சைப்ரஸ் வாயிலாக ருமேனியாவை அடைந்ததாகவும், அங்கிருந்து பக்கத்து தேசமான உக்ரைனுக்குள் பாகிஸ்தான் ஆயுதங்கள் நுழைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆகஸ்டில் நடந்ததாக சொல்லப்படும் இந்த ஆயுத ஏற்றுமதி விவகாரத்தை பாகிஸ்தான் கடுமையாக மறுத்துள்ளது. உக்ரைன் – ரஷ்யா போர் விவகாரத்தில் பாகிஸ்தான் நடுநிலை வகிப்பதாகவும் உறுதிபட தெரிவித்துள்ளது. ஆனால் 2022-23 நிதியாண்டில் பாகிஸ்தானின் ஆயுத ஏற்றுமதி 3,000 சதவீதம் வரை எகிறி இருப்பதையும், அதற்கான பணப்பரிமாற்றங்களின் ஸ்டேட் பாங்க் ஆப் பாகிஸ்தானின் தரவுகளில் இருந்தும் ஊடகங்கள் அம்பலப்படுத்தி உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here