சென்னை:
சென்னை கொத்தவால்சாவடியில், கோவிலில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் கைதானவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். சென்னை கொத்தவால் சாவடியில் ஸ்ரீவீரபத்திரசாமி கோயிலுக்குள் பெட்ரோல் குண்டு வீசிய சென்னை பிராட்வே, ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்த முரளி கிருஷ்ணன்(39) என்பவர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் கைதானவரை போலீசார் 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தபோது, அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்த நிலையில், மதுவுக்கு அடிமையாகி தினமும் குடித்து வந்துள்ளார். அச்சமயம் வீட்டின் மேலே இருந்து குதித்து விடு, தற்கொலை செய்து கொள்.எப்படியாவது இறந்து விடு,” என ஒரு குரல் கேட்டுக் கொண்டே இருந்ததாகவும் அவர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
மேலும், அவர் போலீசாரிடம் கூறும்போது, “கடந்த 4 ஆண்டுகளாக ஸ்ரீவீரபத்திரசாமி கோயிலுக்கு தினமும் வந்து வழிபட்டேன். ஆனால், நான் நினைத்தது, வேண்டியது இதுவரை நடக்கவில்லை. சாமி எனக்கு எதுவும் செய்யவில்லை. தன்னை அனாதை யாக்கி தனியாக விட்டுவிட்டார்.
அந்த கோபத்திலும், விரக்தியிலும்தான் பெட்ரோல் குண்டு வீசினேன்.நானும் மறுநாள் தற்கொலை செய்ய திட்டமிட்டு இருந்தேன்.’’என தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டபோது, “முதல்கட்ட விசாரணையில் முரளி கிருஷ்ணன் அதிகமான மதுபோதை காரணமாக தெளிவற்ற மன நிலையில் இருந்ததால் இச்செயலில் ஈடுபட்டுள்ளார்.தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது” என்றனர். கோயிலுக்குள் பெட்ரோல் குண்டு வீசிய முரளிகிருஷ்ணன் அப்பகுதியில் முந்திரி, உலர் பழங்கள்விற்கும் கடை நடத்தி வந்துள்ளார்.
























