ஒருவர் ஒரு ஸ்மார்ட் போனை பயன்படுத்தவே படாத பாடு படும் நிலையில், கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை, ஒரே சமயத்தில் 20 ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்துவதாகக் கூறி ஆச்சரியப்பட வைத்துள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர் பிச்சை, கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கிறார். சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட அவர், டெக் பழக்கம், குழந்தை வளர்ப்பு, ஏஐ உள்ளிட்ட விஷயங்கள் குறித்து பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.
அப்போதுதான், ஒரே சமயத்தில் தான் 20 ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தும் ரகசியத்தையும் சொல்லி ஆச்சரியப்பட வைத்தார். ஒரே நேரத்தில் இத்தனை செல்போன்களை பயன்படுத்துவதற்கான காரணத்தை விளக்கிய சுந்தர் பிச்சை, “பணி நிமித்தமாக இத்தனை ஸ்மார்ட்போன்களை பயன்படுத்த வேண்டி இருக்கிறது. பல்வேறு சாதனங்களில் கூகுள் புராடெக்ட்களின் இயக்கம் எப்படி என்பதை சோதிக்கவும், அப்டேட்டில் இருக்கவும் இதைத் தொடர்ந்து செய்து வருகிறேன். இப்படி செயல்பட்டால்தான், பொதுமக்கள் விரும்பும் புத்தம்புதிய அம்சங்களை கூகுள் நிறுவனத்தால் கொடுக்க முடியும்” என்று சொன்னார்.
இந்த நேர்காணலில் குழந்தை வளர்ப்பு குறித்தும் பேசிய அவர், “குழந்தைகள் அதிகநேரம் செல்போன் பயன்டுத்துவதை கண்டிக்காமல், கட்டுப்படுத்தும் விதத்தில் பெற்றோர்களின் அணுகுமுறை இருக்க வேண்டும். எவ்வளவு நேரம் செல்போன் பார்க்கிறார்கள் என்பதை பெற்றோர்கள் கண்டிப்பாக கண்காணிக்க வேண்டும். இந்த விஷயத்தைப் பொறுத்தவரை குழந்தைகளை அவர்கள் போக்கில் விடக்கூடாது” என்று சொன்னார்.
ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சி குறித்தும் பேசிய சுந்தர் பிச்சை, “மனிதன் உறுவாக்கிய மிக முக்கிய தொழில்நுட்பமாக ஏஐ இருக்கும். எப்படி நெருப்பும், மின்சாரமும் மனித வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தியதோ அது போன்ற தாக்கத்தை ஏஐ நிச்சயமாக ஏற்படுத்தும்” என்றார்.