‘என்ஜாய் எஞ்சாமி’ பாடலால் ஒரு ரூபாய் கூட வருமானம் வரவில்லை- சந்தோஷ் நாராயணன்

‘என்ஜாய் எஞ்சாமி’ பாடல் தொடர்பாக அடுத்த ஒரு சர்ச்சை வெடித்துள்ளது. இந்தப் பாடல் வெளியாகி மூன்று வருடங்கள் ஆகியும் தங்களுக்கு இன்னும் ஒரு ரூபாய் கூட வருமானம் வரவில்லை என இசையமைப்பாளர் சந்தோஷ் நாரயணன் வீடியோ மூலம் தெரிவித்துள்ளார்.

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தயாரிப்பில், தெருக்குரல் அறிவு இசையமைத்து பாடல் எழுதியது ‘என்ஜாய் எஞ்சாமி’. இதில் அறிவும் தீயும் பாடி இருப்பார்கள். தனியிசை பாடலாக வெளியான இது வெளியாகி மூன்று வருடங்கள் ஆகிறது. இந்தப் பாடல் தன்னுடையது என்றும் ஆனால், இதில் தான் இருட்டடிப்பு செய்யப்பட்டு, தீ முன்னிறுத்தப் பட்டதாக அறிவு சர்ச்சையைக் கிளப்பினார். இந்தப் பிரச்சினை இருவருக்குள்ளும் இன்னும் முடிவுக்கு வரவில்லை.

ஆனால், அறிவு தன்னைத் தவறாகப் புரிந்து கொண்டார் எனவும், அவர் என்னுடைய செல்போன் எண்ணை பிளாக் செய்து விட்டார் எனவும் சந்தோஷ் நாராயணன் சமீபத்தில் சொல்லி இருந்தார். இந்த சூழ்நிலையில்தான், அவர் ‘என்ஜாய் எஞ்சாமி’ பாடல் மூலம் தங்களுக்கு ஒரு பைசா கூட வருமானம் இன்னும் கிடைக்கவில்லை என வீடியோ வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், “’என்ஜாய் எஞ்சாமி’ பாடல் வெளியாகி மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது. இதன் வரவேற்பு நீங்கள் அறிந்ததே! இந்தப் பாடல் மூலம் எங்களுக்குக் கிடைத்த வருமானம் பற்றி சொல்ல விரும்புகிறேன். இதுநாள் வரை எங்களுக்கு கிடைத்தது ஜீரோ வருமானம் தான். ஒரு பைசா கூட வரவில்லை. சம்பந்தப்பட்ட மியூசிக் லேபிளை நாங்கள் தொடர்பு கொள்ள முயன்றோம். ஆனால், பலனில்லை. இப்படியான மோசமான அனுபவத்தால்தான் சொந்த ஸ்டுடியோவைத் தொடங்கினேன்.

தனியிசைக் கலைஞர்களுக்கு வெளிப்படைத் தன்மையுடன் இயங்கும் தளங்கள் தேவை. எனது யூடியூப் சேனல் மூலம் வரும் வருவாயும் அந்த மியூசிக் லேபிளுக்கே செல்கிறது” எனப் பேசியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here