நாம் அனைவரும் சுத்தமான மற்றும் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டியதன் அவசியம் குறித்து அறிந்திருப்போம். ஊட்டச்சத்து நிபுணர்கள் பலரும் ஆரோக்கியமான உணவுகளை மட்டும் சாப்பிடுமாறு பரிந்துரைக்கின்றனர். தவறும் பட்சத்தில் டைப்-2 நீரிழிவு மற்றும் உடல் பருமன் உள்ளிட்ட பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. எளிமையாக சொன்னால் சுத்தமான உணவு என்பது உணவின் சுத்தத்தை குறிப்பது மட்டுமின்றி ஆரோக்கியமற்ற உணவுகளை உங்கள் அன்றாட உணவில் பட்டியலில் இருந்து நீக்குவதையும் குறிக்கிறது. எனவே நீங்கள் சாப்பிட வேண்டிய மற்றும் சாப்பிடக்கூடாத உணவுகள் குறித்து இங்கு தெரிந்த கொள்வோம்.
பழங்கள் மற்றும் காய்கறிகள் : பழங்கள் மற்றும் காய்கறிகளை நாம் அன்றாடம் சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியமாக இருக்க முடியும். மேலும் குறிப்பாக இயற்கை முறையில் விளைவிக்கப்படும் காய்கறிகள், பழங்கள் நமது தேவையான ஊட்டத்தை அளிக்கிறது. பழங்கள் மற்றும் காய்கறிகள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை என்பதால் மிகவும் ஆரோக்கியமானவை, இது நமது உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. இவற்றில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், தாதுக்கள், நல்ல கார்போஹைட்ரேட்டுகள், புரதங்கள், நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் அதிக அளவு கொலஸ்ட்ரால், டைப் -2 நீரிழிவு உள்ளிட்ட பல்வேறு நோய்கள் வராமல் தடுத்து ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.
இறைச்சி குறைவாக சாப்பிடுங்கள் : கோழி, சிவப்பு இறைச்சி ஆகியற்றில் சில ஆரோக்கியமான சத்துக்கள் இருந்தாலும், இவற்றை குறைவாக சாப்பிடுவது நல்லது. அசைவ பிரியர்கள் அடிக்கடி இறைச்சியை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இதனால் இதய நோய் உள்ளிட்ட பிரச்சனைகள் வராமல் தவிர்க்க முடியும். அதற்கு பதிலாக காளான், பன்னீர் போன்றவற்றை சாப்பிடலாம்.
முழு தானியங்கள் : முழு தானியங்களை அடிக்கடி சாப்பிடுவது ஆரோக்கியமானது. முழு தானியங்கள்கள் சாப்பிடுவதால் செரிமானத்தை மேம்படுத்துகிறது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மேலும் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தயங்காமல் முழு தானியங்களை சேர்த்து கொள்ளலாம். தானியங்களை சுத்தரிக்கும் போது தவிட்டை நீக்கிவிட்டால் பல ஊட்டச்சத்துக்கள் அழிந்துவிடும், முழு தானியங்களில் அனைத்து ஊட்டச்சத்துக்களும் தக்க வைக்கப்படுகிறது. எனவே தினமும் அரிசி, கோதுமை, பழுப்பு அரிசி, ஓட்ஸ், சோளம், பார்லி, கம்பு, கேழ்வரகு, தினை போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை சேர்த்து கொள்ளலாம்.
பதப்படுத்தப்பட்ட உணவுகள் வேண்டாம் : பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் நிறைத்த உணவுகளை அறவே தவிர்த்து விடுவது நல்லது. பேக்கிங் செய்யப்பட்ட உணவுகளில் இரசாயனங்கள் நிறைந்திருப்பதால் உடலுக்கு பல்வேறு தீங்குகளை விளைவிக்கிறது. இதனால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது என்பதால் கடைகளில் விற்பனை செய்யப்படும் பொருட்களை சாப்பிடுவதை தவிர்த்து விடுங்கள். மேலும் இதில் அதிகளவு கலோரிகளைக் கொண்டிருப்பதால் சிறு வயதிலேயே உடல் எடை பிரச்னையை ஏற்படுத்துகிறது. எனவே வீட்டிலேயே தயார் செய்த உணவுகள், சிற்றுண்டிகளை சாப்பிடுவது ஆரோக்கியமானது.
உணவில் சர்க்கரை, உப்பை கட்டுப்படுத்துங்கள் : ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ நினைப்பவர்கள் அனைவரும் தங்களது உணவில் சர்க்கரை, உப்பை கட்டுப்படுத்துவது அவசியமானதாகும். இந்த இரண்டில் ஏதேனும் ஒன்றின் அதிகப்படியான பயன்பாடு கூட உங்கள் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும். நாம் அன்றாடம் சாப்பிடும் பிஸ்கட், சிப்ஸ், குளிர்பானங்கள், சோடாக்கள் உள்ளிட்ட பல உணவு பண்டங்களிலும் சர்க்கரை மற்றும் உப்பு அதிகமாக சேர்ந்திருப்பதால் அது நமது உடலுக்கு தீங்கு விளைவிக்கிறது. எனவே இவற்றை தவிர்த்து அன்றாடம் ஒரு வகை கீரை, காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிடுவதை வழக்கமாக்கி கொள்ளுங்கள்.