கோலாலம்பூர், டிசம்பர் 8 :
ஜாலான் கெரிஞ்சி, டாலாமில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் தெனாகா நேஷனல் பெர்ஹாட் (TNB store room) களஞ்சிய அறையில் சுமார் 13 கிலோ கஞ்சாவை போலீஸார் செவ்வாய்க்கிழமை மீட்டனர்.
பிரிக்ஃபீல்ட்ஸ் காவல்துறைத் தலைவர் ஏசிபி அமிஹிசாம் அப்துல் ஷுகோர் நேற்று கூறியதாவது: தமது துறைக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12.30 மணியளவில் போலீஸ் குழு ஒன்று குறித்த இடத்திற்குச் சென்று, போதைப்பொருள் வைக்கப்பட்டிருந்த TNB மின் களஞ்சிய அறையில் சோதனை நடத்தியது.
மூன்று பைகளில் கண்டெடுக்கப்பட்ட கஞ்சா, போதைப்பொருள் பாவனையாளர் 4,308 பேர் பயன்படுத்த முடியும் என அவர் கூறினார்.
“இந்த வழக்கில் தொடர்புடைய போதைப்பொருள் விற்பனையாளர்களைக் கண்டுபிடிப்பதற்கான விசாரணைகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சுமார் 32,000 வெள்ளி இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
TNB ஊழியர்கள் இந்த வழக்கில் தொடர்புள்ளார்களா அல்லது போதைப்பொருள் விநியோகத்தை பாதுகாப்பாக வைத்திருப்பதற்காக போதைப்பொருள் கடத்தல் காரர்களால் TNB களஞ்சிய அறைக்குள் அத்துமீறி நுழைந்தனரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் பிரிக்ஃபீல்ட்ஸ் போலீசை 02-2297 9222 ext.553 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு அமிஹிசாம் கேட்டுக் கொண்டார்.