பெட்டாலிங் ஜெயா:
கைவிரல் அளவுக்கு சின்னஞ்சிறிய வாகனப் பதிவெண் பலகையை பொருத்தியதற்காக மோட்டார் சைக்கிள் ஓட்டி ஒருவருக்கு சாலைப்போக்குவரத்து துறை அபராதம் விதித்து உள்ளது.
ஷா ஆலம், சைபர்ஜெயா, பெட்டாலிங் ஜெயா மற்றும் சுபாங் ஜெயாவில் போக்குவரத்து விதிமீறல்களை அதிகாரிகள் கண்காணித்துக்கொண்டு இருந்தபோது அந்த மோட்டார்சைக்கிள் அவர்களின் பார்வையில் பட்டது என்று, சாலைப் போக்குவரத்துத் துறை செப்டம்பர் 2ஆம் தேதி தனது ஃபேஸ்புக்கில் ஒரு பதிவில் தெரிவித்திருந்தது.
கிட்டதட்ட நுண்ணோக்கி கொண்டு பார்க்கும் அளவுக்கு பதிவெண்கள் ஆகச் சிறியதாக அந்தப் பலகையில் இருந்ததை அதிகாரிகள் கண்டனர்.
‘உலகின் ஆகச் சிறிய பதிவெண் பலகை’ என்று இணையவாசிகள் பலரும் அதனைக் குறிப்பிட்டனர்.
கார் மற்றும் வாகனங்களுக்கான பதிவெண் பலகையில் குறிப்பிட்ட சில மாற்றங்களைச் செய்துகொள்ள காவல்துறை அதிகாரிகள் அனுமதிக்கிறார்கள். ஆயினும், இந்த அளவுக்குச் சிறியதாக மாற்றுவது சட்டவிரோதம். அதற்கு 300 ரிங்கிட் முதல் 3,000 ரிங்கிட் வரை அபராதம் விதிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.