தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.22 கோடி மதிப்புள்ள ஹெரோயின் போதைப் பொருள் சுங்கத்துறையால் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை விமான நிலையத்தில் விமானப் பயணிகள் வழக்கமான சுங்கப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது, ஜான் ஜுட் தவாஸ் என்ற பயணி மீது சந்தேகம் எழுந்தது.
அதையடுத்து அவர் வைத்திருந்த கைப்பையை அதிகாரிகள் சோதனையிட்டபோது, அதில் 3.6 கிலோ ஹெரோயின் இருப்பது தெரியவந்தது.
அதன் அனைத்துலகச் சந்தை மதிப்பு ரூ.22 கோடி என்று குறிப்பிட்ட அதிகாரிகள், கைதானவரிடம் விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவித்துள்ளனர்.





















