கூலாய்:
கூலாயிலிருந்து வடக்கு நோக்கிச் செல்லும் வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் 38.1 ஆவது கிலோமீட்டரில், இன்று அதிகாலை ஏழு கார்கள் ஏற்றப்பட்ட ஒரு டிரெய்லர் தீப்பிடித்து எரிந்தது.
குறித்த சம்பவம் தொடர்பில் அதிகாலை 4.52 மணிக்கு அவசர அழைப்பு வந்ததாக, ஜோகூரில் உள்ள மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (JBPM) செய்தித் தொடர்பாளர் கூறினார்.
அவரது கூற்றுப்படி, கூலாய், ஸ்கூடாய், தெப்ராவ் ஆகிய தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த 25 உறுப்பினர்கள் 3 இயந்திரங்களுடன் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனர்.
இந்த தீ விபத்தின் விளைவாக டிரெய்லரில் கொண்டு செல்லப்பட்ட ஏழு கார்களும் கிட்டத்தட்ட 70 சதவீதம் எரிந்தன.
“இந்த கார்கள் ஒரு நிகழ்ச்சிக்காக சிப்பாங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது என்று ஆரம்பகட்ட விசாரணையில் கண்டறியப்பட்டதாக அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறினார்.
மேலும் இந்த சம்பவத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றார்.
“தீ விபத்துக்கான காரணம் மற்றும் மதிப்பிடப்பட்ட இழப்பு இன்னும் விசாரணையில் உள்ளது,” என்றும் அவர் கூறினார்.