கர்நாடகா:
கோழி முட்டையின் நிறம் என்னவென்று கேட்டால், எல்லோரும் உடனடியாக “வெள்ளை” என்றுதான் கூறுவார்கள். ஆனால், கர்நாடகாவில் உள்ள ஒரு கோழி, இந்த விதிக்கு மாறாக நீல நிறத்தில் முட்டையிட்டு, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த அரிய காட்சியைப் பார்ப்பதற்காக, மக்கள் ஆர்வத்துடன் அந்தக் கோழி வளர்ப்பவரைத் தேடிச் செல்கின்றனர்.
கர்நாடகாவின் தாவணகெரே மாவட்டத்திலுள்ள நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த சையத் நூர், சில நாட்டுக்கோழிகளை வளர்த்து வருகிறார். வழக்கம்போல், கோழி முட்டைகளைச் சேகரிக்கச் சென்ற அவருக்கு, ஒரு கோழி நீல நிறத்தில் முட்டையிட்டதைக் கண்டு அதிர்ச்சி ஏற்பட்டது. உடனடியாக, கால்நடைத் துறை அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தார். அதிகாரிகளும் இந்த அதிசயத்தைக் கண்டு வியந்து போனார்கள்.
முட்டையின் வெளி ஓடு மட்டுமே நீல நிறத்தில் காணப்படுகிறது என்றும், உள்ளே வழக்கமான நிறத்திலேயே உள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும், முட்டை ஏன் நீல நிறத்தில் உள்ளது என்பதைக் கண்டறிய, கால்நடைத் துறை அதிகாரிகள் அந்தக் கோழியை ஆய்வுக்கு உட்படுத்தத் திட்டமிட்டுள்ளனர்.




















