மலாக்கா:
நாட்டின் சாலைகளில் செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் பயணிக்கும் வெளிநாட்டினரின் எண்ணிக்கை கவலையளிக்கும் விஷயமாகவுள்ளது என்று சாலைப் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
இந்த பிரச்ச்சினைய தீர்க்கும் வகையில் சாலைத் தடைகளில் குறித்த வெளிநாட்டினரைக் கவனிப்பதே தற்போது தமது அமலாக்கக் குழுவின் கவனம் என்று JPJ மூத்த அமலாக்க இயக்குனர் டத்தோ லோக்மான் ஜமான் கூறினார்.
“அனைத்துலக ஓட்டுநர் உரிமம் உள்ள வெளிநாட்டவர்கள் மலேசியச் சாலைகளில் அனுமதிக்கப்படுகிறார்கள், ஆனால் சரியான ஆவணங்கள் இல்லாதவர்கள் சாலைகளில் வாகனமோட்டுவது குறித்து நாங்கள் கவலைப்படுகிறோம்” என்று அலோர் காஜா-மலாக்கா தெங்கா-ஜாசின் நெடுஞ்சாலையில் (AMJ ) புதன்கிழமை இரவு (செப்டம்பர் 13) நடந்த சிறப்பு நடவடிக்கையை மேற்பார்வையிட்ட பின்னர் அவர் கூறினார்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து ஜூலை வரை உரிமம் இல்லாமல் சாலையில் சென்றதற்காக 63 பேரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் கூறினார்.
செப்டம்பர் 1 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 30 ஆம் தேதி முடிவடையும் மோட்டார் சைக்கிள்களுக்கான சிறப்பு நடவடிக்கையின் முடிவில் செல்லுபடியாகும் உரிமம் இல்லாத வெளிநாட்டவர்களின் முழு புள்ளிவிவரங்களையும் JPJ பெறும் என்று லோக்மேன் கூறினார்.
நாடு முழுவதும் செப்டம்பர் 1 முதல் செப்டம்பர் 13 வரையிலான JPJஇன் நடவடிக்கையின் போது 140,544 மோட்டார் சைக்கிள்களை ஆய்வு செய்தது, அங்கு பல்வேறு குற்றங்களுக்காக 64,295 அபராதங்கள் வழங்கப்பட்டதாக அவர் கூறினார்.
இந்த நடவடிக்கையின் போது மொத்தம் 3,111 மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் லோக்மான் தெரிவித்தார்.
“இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்துவது மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்களிடையே ஏற்படும் இறப்பு எண்ணிக்கையை குறைப்பது” என்று அவர் கூறினார்.
மேலும் 65 JPJ அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுடன் நேற்றிரவு AMJ இல் மேற்கொண்ட நடவடிக்கையில் 380 மோட்டார் சைக்கிள்கள் சோதனை செய்யப்பட்டு 33 பறிமுதல் செய்யப்பட்டன என்று அவர் கூறினார்.