புத்ரா ஜெயா:
மலேசியாவிலிருந்து இந்தியாவுக்கு அழுங்குகளைக் கடத்த முயன்ற, இந்திய நாட்டு ஆடவர் ஒருவர், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கடந்த அக்டோபர் 28ஆம் தேதி கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் அவரது பயணப் பெட்டியில் சோதனை மேற்கொண்டபோது, அதில் மூன்று அழுங்குகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக அரச மலேசிய சுங்கத் துறையின், கூட்டரசு பிரதேச நடவடிக்கைப் பிரிவு இயக்குநர் வோங் பூன் சியான் தெரிவித்தார்.
ஆடவரின் பயணப் பெட்டியில் சந்தேகத்துக்குரிய பொருள்கள் இருந்ததைத் தொடர்ந்து, விமான நிலைய பாதுகாப்புக் காவல்துறை அதிகாரிகள், அரச மலேசிய சுங்கத் துறைக்கும், வனவிலங்கு பாதுகாப்புப் பிரிவினருக்கும் தகவல் வழங்கியதாக அவர் கூறினார்.
பின்னர், அந்த பயணப் பையை தமது தரப்பு திறந்து சோதனையிட்ட போது, அதில் மூன்று அழுங்குகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக பூன் சொன்னார்.
ஆரம்பகட்ட விசாரணையில், இந்தியாவில் செயல்படும் முகவர்கள்குறித்த அழுங்குகளை மலேசியா வாயிலாக இலங்கையின் கொழும்புக்குக் கடத்துவதற்கு, சம்பந்தப்பட்ட ஆடவரை இடைத்தரகராக பயன்படுத்தி இருக்கலாம் என நம்பப்படுகிறது.
உலகின் அதிகளவில் கடத்தப்படும் பாலூட்டிகளான அழுங்குகள் அவற்றின் செதில்களுக்காக வேட்டையாடப்படுகின்றன. இது பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. அத்துடன் அதன் இறைச்சி சில ஆசிய நாடுகளில் சுவை மிக்க உணவாக கருதப்படுகிறது. அதிக தேவை, லாபகரமான வருமானத்தால் சட்டவிரோத வனவிலங்கு வணிகம் தற்போது பிரபலமான ஒரு தொழிலாக மாறியுள்ளது கவலைக்குரியது.




















