தலைக்குமேல் வெள்ளம் போய்விட்டது என்பார்கள். தலைக்குமேல் போய்விட்டால் மூழ்கடிக்கப்பட்டுவிட்டோம் என்பதுதானே பொருள். பொருள் அதுவல்ல.
இப்போதெல்லாம் வார்த்தைகளுக்கான அர்த்தங்கள் மாறிவிட்டது என்பதாகவே உணரப்படுகிறது. தலைக்குமேல் ரயிலா ஓடுகிறது என்ற கிண்டல் பேசிய காலம் ஒன்றும் இருந்தது. இப்போது அதே வார்த்தை உண்மையாகிவிட்டது.
எங்குபோய் நின்றாலும் தலைக்குமேல் ரயில்கள்தான் ஓடுகின்றன. இன்றைய கால கட்டத்தில் மக்களின் போக்குவரத்து மிகவும் சுலபமாகிவிட்டன என்பத்ற்கு இதைவிட அடையாளம் வேறு என்ன இருக்க முடியும்?
சில இடங்களில், மேம்பாலத்தில் எம்ஆர்.டி ரயில்கள் செல்லும்போது, ஆகாய விமானத்தில் பயணம் செய்வதுபோல் இருக்கும். குழந்தைகளுக்கு இது மகிழ்சியாகவும் ஆனந்தமாகவும் இருப்பதைப் பார்த்திருக்கலாம்.
இப்படிப்பட்ட அனுபவத்தை இன்னும் பலர் அனுபவிக்காமல் இருக்கிறார்கள். பலர் எல்ஆர்.டி ரயில் பயணத்தை அனுபவித்திருக்கலாம். எம்ஆர்டி ரயில் பயணம் முற்றிலும் மாறுபட்ட பயணம் என்பதை அனுபவித்தவர்களுக்கு நன்குபுரியும்.
சுங்கைபூலோ வட்டாரம் இவ்வகை ரயில்களுக்குத் தலைமை தாங்கிநிற்கிறது. சுங்கை பூலோ வட்டாரத்தை பல அரசியல்வாதிகள் மறக்கவே முடியாது. நாட்டின் சிறந்த மருத்துவமனையும் சிறையும் இங்குதான் இருக்கிறது. உயர்ந்த கட்டடங்கள் எழ ஆரம்பித்துவிட்டன.
முன்பிருந்த ஆர் ஆர் ஐ ரப்பர் ஆராய்ச்சிக்கழகம் முற்றிலும் மறுபிறவி எடுத்திருக்கிறது. சுங்கைபூலோ ரயில்நிலையம் முக்கியத்தளமாக இருப்பதால் இங்கிருந்து காஜாங் நகரை ஏறக்குறைய ஒன்றரை மணிநேரத்தில் இணைக்கிறது.
கோலாலம்பூரின் செண்ட்ரலைக் கடந்து செல்லும்போது சில சுரங்கப்பாதையின் அனுபவத்தையும் அனுபவிக்க வில்லையென்றால் அது பேரிழப்பாகவே இருக்கும்.
எம்ஆர்டி ரயில் முப்பதுக்கும் மேற்பட்ட நிலயங்களைக் கடந்து செல்கிறது ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரமே நிற்கிறது. எங்கு வேண்டுமானாலும் இறங்கிக்கொள்ளலாம். உள்வட்டாரத்தைச் சுற்றிப்பார்க்கலாம். பிறகு வேறொரு ரயிலில் ஏறிக்கொள்ளலாம்.
இதைவிட இன்னுமொரு சிறப்பு இருக்கிறது. மூத்த குடிமக்களுக்கு அறை கட்டணமே வசுலிக்கப்படுகிறது. இதற்குத் தேவை அடையாள அட்டையைக் காட்டவேண்டும் அவ்வளவுதான். வயதாகிவிட்டதே! நம்மை யாரும் கவனிக்க வில்லையே என்று கவலைப்படத் தேவையேயில்லை. வயதானத்திற்கும் அர்த்தம் உண்டு.
இன்னும் என்ன யோசனை? சும்மா ஒரு ரவுண்ட் வந்தாலே போதும் மனம் ஜம்மென்றிருக்குமே! பேரப்பிள்ளைகள் உடன் இருந்தால் இன்னும் கூடுதல் மகிழ்ச்சி இருக்கும்.
- இளமணி