ஜோகூர்:
அனுமதியின்றி 85 கிலோ மானிய விலை சமையல் எண்ணெய் பாக்கெட்டுகளை வைத்திருந்த ஒரு வெளிநாட்டு நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நேற்று (செப்டம்பர் 18) மதியம் 12.30 மணியளவில், 35 வயது சந்தேக நபரின் காரை உளவுப் பிரிவினர் பித்தொடர்ந்து சென்று அவரைக் கைது செய்ததாக மாநில காவல்துறைத் தலைவர் ஆணையர் டத்தோ கமாருல் ஜமான் மாமட் தெரிவித்தார்.
“சந்தேக நபரால் அப்பொருட்களை வைத்திருப்பதற்கான செல்லுபடியாகும் ஆவணங்கள் எதனையும் சமர்ப்பிக்க முடியவில்லை.அவர் ஓட்டிச் சென்ற கார் பூத்தில் ஐந்து அட்டைப்பெட்டிகளில் 1 கிலோ சமையல் எண்ணெயை பதுக்கி வைத்திருந்தார் என்றும் ஒவ்வொரு அட்டைப்பெட்டியிலும் 17 பாக்கெட்டுகளில் மானிய விலையிலான சமையல் எண்ணெய் இருந்தது” என்றும் டத்தோ கமாருல் இன்று செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 19) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
மேலும் விநியோக கட்டுப்பாடு சட்டம் 1961 இன் பிரிவு 21 இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகவும், இது குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 1 மில்லியன் ரிங்கிட் அபராதம் அல்லது மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
“மானிய விலையில் சமையல் எண்ணெய் கடத்தலில் ஈடுபடுபவர்கள் உடனடியாக நிறுத்த வேண்டும், ஏனெனில் இதுபோன்ற செயல்களை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம், மேலும் நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம்,” என்று அவர் மேலும் கூறினார்.