கோலாலம்பூர்:
இன்று (அக். 9) காலை 8 மணி நிலவரப்படி, நாடு முழுவதும் உள்ள பத்துப் பகுதிகள் ஆரோக்கியமற்ற காற்று மாசுக் குறியீடு (API) அளவைப் பதிவு செய்துள்ளன.
இதில் மிக மோசமாக கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் காற்றுத்தரம் ஆரோக்கியமற்றதாக பதிவானது. அதாவது செராஸ் மற்றும் பந்திங்கில் காற்று மாசுக் குறியீடு 157 ஆக பதிவாகியுள்ளது என்று மலேசிய காற்று மாசுபாடு குறியீட்டு மேலாண்மை அமைப்பு (APIMS) அதன் இணையத்தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதேநேரத்தில் சிலாங்கூரில் உள்ள ஜோஹன் செத்தியா (MCAQM) நள்ளிரவு 1 மணிக்கு ஆரோக்கியமற்ற API ஐ எட்டியது, இருப்பினும் இன்று காலை 8 மணி நிலவரப்படி 152 API ஐ பதிவு செய்தது.
இதற்கிடையில், ஆரோக்கியமற்ற API அளவீடுகளைக் கொண்ட பிற பகுதிகளாக புத்ராஜெயா (110), பெட்டாலிங் ஜெயா (144), ஷா ஆலம் (153), கிள்ளான் நகரம் (154), நீலாய் (153), புக்கிட் ரம்பாய் (153), மற்றும் பத்து பஹாட் (117) என்ற காற்றுத்தரத்தை பதிவு செய்தன.
இதில் செராஸ் மற்றும் புக்கிட் ராம்பாயில் ஏபிஐ அளவீடுகள் 24 மணி நேரத்திற்கும் மேலாக 150ஐத் தாண்டி ஆரோக்கியமற்ற நிலைகளில் பதிவாகியுள்ளது என்பது சற்று கவலைக்குரியதாகவே உள்ளது.
எனவே வெளிப்புற நடவடிக்கைகளை திட்டமிட்டு மேற்கொள்ளுமாறும், முகக்கவசம் அணிந்துகொள்ளுமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.